Saturday, April 11, 2020

அரூ - நேர்காணல்

என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்பர்களுக்கு நன்றி. பாலா, சுஜா, ராம் மற்றும் சிங்கப்பூர் வாசகராக கேள்விகளைக் கேட்டிருக்கும் கதிருக்கும் நன்றி. அரூ இதழ் குழுவினருக்கு என் அன்பு.

நேர்காணலிலிருந்து :-

விருதுகளும், பட்டியல்களும் எப்போதுமே சர்ச்சைகளை உருவாக்குபவை. அதுகுறித்து உங்கள் பார்வை?
பத்து வருடங்களுக்கு முன்பு விருதுகள் மற்றும் பட்டியல்கள் மீது எனக்கொரு கறாரான பார்வை இருந்தது. கொடுக்கப்படும் விருதுகள் மீதும் விமர்சகர்கள் அல்லது மூத்த எழுத்தாளர்கள் இடும் பட்டியல்கள் மீதும் நம்பிக்கை இருந்ததுதான் இந்தக் கறார் பார்வைக்குக் காரணம். எனவே எப்போது பட்டியல்கள் அல்லது விருதுகள் வந்தாலும் அவற்றின் தரம் குறித்தும் தகுதியின்மை குறித்தும் உருவாகும் சர்சைகளில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். முரண்படல்கள் விவாதங்கள் வழியாய் தமிழ்ச் சூழலில் நிறைய பகைமையை உருவாக்கிக் கொண்டாயிற்று. மேலும் அவை கொண்டு வரும் அயற்சி அல்லது இத்தகைய பேச்சுகள் உருவாக்கும் கவன ஈர்ப்பு போன்றவற்றில் திரும்பத் திரும்ப ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இந்த எல்லா விமர்சனங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை என்பது பிடிபட்டது.
தமிழில் மட்டுமல்ல உலக அளவில் விருதுகள் என்பவை சாய்வுத்தன்மை கொண்டதுதான். இந்த விருதுகளை வழங்கும் அமைப்புக்கென்று ஓர் அரசியல் இருக்கும். அந்த அரசியலுக்கு ஒத்துவரும் அல்லது அமைப்புக்கு இணக்கமாக இருக்கும் நபர்களுக்கோ அல்லது படைப்புகளுக்கோ அந்த அமைப்பு தங்களின் வெகுமதியை விருது என்கிற பெயரில் தரும். இதில் தரம் அல்லது தகுதி போன்ற விஷயங்கள் இரண்டாம்பட்சம்தான்.
பட்டியல்கள் என்பதிலும் இதே அரசியல்தான் நிலவுகின்றது. ஒருவர் தனக்குப் பிடித்த நூல்களை அல்லது படைப்புகளைச் சிறந்தது என வகைப்படுத்துகிறார் என்றால் அந்தப் பட்டியல் அவருக்கானதுதான். அவர் நம்பும் அரசியல், வாசிப்பு மாற்றும் சாய்வுகளைச் சார்ந்தது. அது எப்படி அனைவருக்குமான பொதுவான தர அடிப்படையிலான பட்டியலாக இருக்க முடியும் என்பன போன்ற புரிதல்கள் வர எனக்குப் பத்து வருடங்கள் ஆயின. எனவே இவை இரண்டையும் குறித்து இப்போது பொருட்படுத்துவது கிடையாது.
உலக அளவில் விருதுகள் இப்போது இன்னொரு இடத்தை அடைந்திருக்கின்றன. அதை நெருங்க அல்லது அந்த விருதை வாங்க விரும்புவோர் அதற்கான ஏராளமான தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அதற்கான ஏஜெண்டுகளை அணுகுவது, விருதுக்கு ஏற்றார்போல் படைப்புகளை உருவாக்குவது – இதன் வழியாக நடுவர்களை இணங்க வைத்து இறுதியில் விருதை அடைவது என்பதுதான் சமகால விருதின் அடிப்படைச் செயல்முறையாக இருக்கிறது. ஆஸ்கர் விருதை வெல்ல ரகுமான் இந்த வழிமுறைகளைக் கடைபிடித்தார். தற்போது தென்கொரியாவின் Bong Joon-ho வும் இதே வழிமுறையைப் பின்பற்றி வெற்றியடைந்திருக்கிறார். Bong Joon-ho வைவிட பார்க் சான் வூக்கும் கிம் கி டுக்கும் மிகச் சிறந்த இயக்குனநர்கள் அவர்களுக்கு ஏன் இந்தப் புகழ் வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் Bong Joon-ho வைப் போல ஹாலிவுட்டில் ஆறு மாதம் வரை தங்கியிருந்து அதற்கான வேலைகளைப் பார்க்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஒப்பீட்டளவில் தமிழ் இலக்கிய விருதுகள் மிகவும் மலிவானவை. இவ்வளவு மெனக்கெட வேண்டாம். இங்கு கொடுக்கப்படும் ஓரிரு விருதுகளைப் பெறத் தமிழ்ச் சூழலில் இருக்கும் அதிகாரம் மிக்க எழுத்தாளர்கள் மற்றும் சில சினிமா தொடர்புகளுடன் சுமுகமான உறவைப் பேணினால் போதுமானது. அல்லது முன்பொரு காலத்தில் எழுதுபவர்களாக இருந்து இப்போது இலக்கிய ஏஜெண்டுகளாக இருக்கும் நபர்களைக் கையில் வைத்துக்கொள்வதும் உடனடிப் பலனைத் தரும். தரம், படைப்பு, அங்கீகாரம் போன்றவற்றை விருதுகளோடும் பட்டியல்களோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எழுதுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது.
இன்னொரு முக்கியமான புரிதல் இருக்கிறது. அது என்னவென்றால், தமிழில் எழுதுபவர்கள் அனைவருமே விளிம்பில் வாழ்பவர்கள்தாம். மற்ற கலைத்துறைகளோடு ஒப்பிடும்போது அங்கீகாரமும் கவனமும் எழுத்துத் துறைக்கு மிகவும் குறைவு. சினிமா என்கிற ஒன்றின் முன்பு அதன் ஆதாரமாய் இருக்கக் கூடிய எழுத்து நிற்கக்கூட அஞ்சுகிறது. இங்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் குறுநில மன்னர்களைப் போலவும், நடிகநடிகையர்கள் வானத்தில் இருந்து அவதரித்தவர்கள் போலவும் உலவும் சூழலில் எழுத்தாளர்கள் கூனிக்குறுகி அடையாளமற்று வாழ வேண்டியிருக்கிறது. எனவே விருது என்கிற பெயரில் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் எழுதுவோருக்குக் கிடைக்கும் கவன ஈர்ப்பையும் விமர்சனம் என்கிற பெயரில் அடித்து நொறுக்கும் மனநிலையில் இருந்து வெளியேறுவது அவசியம் என்பதுதான் அது.
இந்தப் புரிதலுக்கு நான் நகர்ந்து வருடங்கள் ஆகின்றன. இந்த நிலைக்கு அனைவரும் நகர்ந்து விட்டால் சாந்தியும் சமாதானமுமாக தமிழ்ச்சூழலில் இயங்கலாம்.
மேலும் வாசிக்க 

1 comment:

Admin said...

Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

Featured Post

King Pele : அஞ்சலி

சனிக்கிழமை மாலை பயல்கள் ப்ரஸீலின் கால்பந்தாட்ட வீரரான பெலே வின் இழப்பைக் குறித்துக் கேட்டார்கள். அவர் எனக்கு முந்தைய தலைமுறை என்பதால் அவர் வ...